|
அத்தியாயம்-17
பனீ இஸ்ராயீல்(இஸ்ராயீலின் சந்ததிகள்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
17:1. (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன்
அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து
தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள)
மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச்
சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை
நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய
அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு
அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்)
செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும்
இருக்கின்றான்.
17:2. இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக்
கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு
வழிகாட்டியாக ஆக்கி, 'என்னையன்றி வேறு எவரையும்
நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக்
கட்டளையிட்டோம்).
17:3. நாம் நூஹ{டன் கப்பலில் ஏற்றி(க்
காப்பாற்றி)யவர்களின் சந்ததியினரே! நிச்சயமாக
அவர் நன்றி செலுத்தும் அடியாராக இருந்தார்.
17:4. நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக
தவ்ராத்) வேதத்தில்; ''நிச்சயமாக நீங்கள்
பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு
வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள்
செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்"" என்று
அறிவித்தோம்.
17:5. எனவே, அவ்விரண்டில் முதலாவது வாக்குறுதி (நிறைவேறும்
காலம்) வந்த போது, உங்களுக்கு எதிராக (போரில்)
கொடிய வலிமையுடைய நம் அடியார்களை ஏவி விட்டோம்;
அவர்கள் உங்கள் வீடுகளில் புகுந்து (உங்களையும்.
உங்கள் பொருள்களையும்) தேடி (அழித்து)
விட்டார்கள்; (இவ்வாறு முதல்) வாக்குறுதி
நிறைவேறியது.
17:6. பின்னர் அவர்கள் மீது வெற்றியடையும்
வாய்ப்பை உங்கள்பால் திருப்பினோம்; ஏராளமான
பொருள்களையும், புதல்வர்களையும் (தந்தது) கொண்டு
உங்களுக்கு உதவி செய்து, உங்களைத் திரளான
கூட்டத்தினராகவும் ஆக்கினோம்.
17:7. நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கே நன்மை
செய்து கொள்கிறீர்கள். நீங்கள் தீமை செய்தால்
அதுவும் உங்களுக்கே(தீமை)யாகும், உங்கள் முகங்களை
சோகம் அடையச் செய்வதற்காகவும் பைத்துல்
முகத்தஸில் முதல் முறையாக அவர்கள் நுழைந்தது போல்
நுழைந்து அவர்கள் தாங்கள் கைப்பற்றிக் கொண்டவைகளை
முற்றாக அழித்து விடுவதற்காகவும் (எதிரிகளை)
இரண்டாம் வாக்குறுதி வரும்பொழுது (நாம்
ஆனுப்பினோம்).
17:8. (இதன் பின்னரும் நீங்கள் திருந்திக்
கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை
புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே)
திரும்புவீர்களானால், நாமும் (முன் போல்
தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு
ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி
வைத்துள்ளோம்.
17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக
இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும்
நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு,
நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும்
நன்மாராயங் கூறுகிறது.
17:10. மேலும், எவர்கள் மறுமை நாள் மீது
நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக
நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி
இருக்கின்றோம்.
17:11. மனிதன். நன்மையாக பிரார்த்தனை செய்வது
போலவே (சில சமயம்) தீமைக்காகவும்
பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன்
அவசரக்காரனாக இருக்கின்றான்.
17:12. இரவையும், பகலையும் நாம் இரண்டு
அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின்
அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள்
இறைவனுடைய அருட்கொடையை நீங்கள்
தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின்
எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து
கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப்
பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு
பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.
17:13. ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும்
அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்;
கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை
வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை
அவன் பெற்றுக் கொள்வான்.
17:14. ''நீ உன் புத்தகத்தைப் படித்துப் பார்!
இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே
கணக்கதிகாரியாக இருக்கப் போதும்"" (என்று அப்போது
நாம் கூறுவோம்).
17:15. எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன்
தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்;
எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே
கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய
பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்)
தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை
செய்வதில்லை.
17:16. நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக)
அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை
(நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்;
ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப்படாமல்)
வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின்
மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி
விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து
விடுகிறோம்.
17:17. நூஹ{க்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம்
அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின்
பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து
நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன்
போதுமானவன்.
17:18. எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும்
விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை
விரும்புகிறார்களோ, அவர்களில் நாம்
நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே)
விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ
அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச்
சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர்
பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும்
நுழைவார்.
17:19. இன்னும் எவர் மறுமையை நாடி அதற்காகத்
தக்க பிரயாசையுடன், முஃமினாகவும் இருந்து
முயல்கின்றாரோ, அ(த்தகைய)வர்களின் முயற்சி (அல்லாஹ்விடத்தில்
நற்கூலிக்குரியதாக) ஏற்றுக் கொள்ளப்படும்.
17:20. இ(ம்மையை விரும்புப)வர்களுக்கும், (மறுமையை
ஆசிக்கும்) மற்றவர்களுக்கும் உமது இறைவனாகிய நமது
அருட்கொடையிலிருந்து நாமே உதவி செய்கிறோம்; உமது
இறைவனின் அருட்கொடை (எவருக்கும்)
தடுக்கப்பட்டதாக இல்லை.
17:21. (நபியே!) நாம் எவ்வாறு அவர்களில் சிலரைச்
சிலரைவிட (இம்மையில்) மேன்மைப்படுத்தி
இருக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக! எனினும்
மறுமை (வாழ்க்கை) பதவிகளிலும் மிகப் பெரியது,
மேன்மையிலும் மிகப் பெரியதாகும்.
17:22. அல்லாஹ்வுடன் மற்றோர் ஆன்டவனை நீர் (இணை)
ஆக்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீர்
பழிக்கப்பட்டவராகவும், உதவி அற்றவராகவும் அமைந்து
விடுவீர்.
17:23. அவனையன்றி (வேறு எவரையும்) நீர்
வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை
செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன்
விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ
அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக
முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ)
என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் -
அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட
வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான
கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
17:24. இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும்
இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர்
தாழ்த்துவீராக மேலும், ''என் இறைவனே! நான் சிறு
பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு)
அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும்
அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!"" என்று
கூறிப் பிரார்த்திப்பீராக!
17:25. (பெற்றோரை நடத்துவது பற்றி) உங்களுடைய
உள்ளங்களிலிருப்பதை உங்களுடைய இறைவனே நன்கு
அறிவான்; நீங்கள் ஸாலிஹானவர்களாக (இறைவன்
ஏவலுக்கு இசைந்து நடப்பவர்களாக) இருந்தால்; (உள்ளந்திருந்தி
உங்களில் எவர் மன்னிப்புக் கோருகிறாறோ அத்தகைய)
மன்னிப்புக் கோருபவர்களுக்கு (அல்லாஹ்) மிக
மன்னிப்பவனாக இருக்கின்றான்.
17:26. இன்னும், உறவினருக்கு அவருடைய உரிமை (பாத்தியதை)களைக்
கொடுப்பீராக மேலும், ஏழைகளுக்கும்
வழிப்போக்கர்களுக்கும், (அவரவர்களுக்கு உரியதைக்
கொடுத்து விடுவீராக!) வீணாகப் (பொருளை) விரையஞ்
செய்யாதீர்.
17:27. நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள்
ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ
தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக
இருக்கின்றான்.
17:28. (உம்மிடம் பொருளில்லாமல் அதற்காக) நீர்
உம்முடைய இறைவனின் அருளை ஆதரவு வைத்து (அதை)
எதிர்ப்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம்
எவரேனும் எதுவும் கேட்டு,) அவர்களை நீர்
புறக்கணிக்கும்படி நேரிட்டால், (அப்போது)
அவர்களிடம் கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக!
17:29. (உலோபியைப் போல் எதுவும் வழங்காது) உம்
கையை உம் கழுத்தில் கட்டப் பட்டதாக்கிக்
கொள்ளாதீர்; அன்றியும், (அனைத்தையும் செலவழித்து
உம் கையை) ஒரே விரிப்பாக விரித்து விடாதீர்;
அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராகவும், (கையில்
எதுவுமில்லாது) துக்கப்பட்டவராகவும் அமைந்து
விடுவீர்.
17:30. நிச்சயமாக உம்முடைய இறைவன் தான்
நாடியவருக்கு விசாலமாக உணவு (சம்பத்து)களை
வழங்குகிறான்; (தான் நாடியவருக்கு) அளவாகவும்
கொடுக்கிறான் - நிச்சயமாக அவன் தன் அடியார்(களின்
இரகசிய பரகசியங்)களை நன்கு அறிந்தவனாகவும்,
பார்ப்பவனாகவும் இருக்கின்றான்.
17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய
குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும்
உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்)
அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப்
பெரும் பிழையாகும்.
17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்;
நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு
கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய
வழியாகவும் இருக்கின்றது.
17:33. (கொலையை) அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள்
எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை
செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை
செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிசுக்கு (பதிலுக்கு
பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம்
கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில்
செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது
நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக்
கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்.
17:34. அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின்
பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான
முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள்,
இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ
கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்;
நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு
நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.
17:35. மேலும் நீங்கள் அளந்தால், அளவைப்
பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக்
கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே
நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்)
அழகானதுமாகவும்.
17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க)
ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்;
நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும்,
இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி)
கேள்வி கேட்கப்படும்.
17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க
வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப்
பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு
உயர்ந்து விடவும் முடியாது.
17:38. இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில்
வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.
17:39. இவையெல்லாம் உம்முடைய இறைவன் உமக்கு வஹீ
(மூலம்) அறிவித்துள்ள ஞான உபதேசங்களாகும். ஆகவே
அல்லாஹ்வுடன் வேறு நாயனை (இணையாக) ஏற்படுத்தாதீர்;
(அப்படிச் செய்தால்) நீர்
நிந்திக்கப்பட்டவராகவும் துரத்தப்பட்டவராகவும்
நரகத்தில் எறியப்படுவீர்.
17:40. (முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன்
உங்களுக்கு ஆண் மக்களை அளித்து விட்டு (தனக்கு
மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை
எடுத்துக்கொண்டானா? நிச்சயமாக நீங்கள்
மிகப்பெரும் (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.
17:41. இன்னும் அவர்கள் (சிந்தித்துப்)
படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில்
திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்;
எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து)
வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை!
17:42. (நபியே!) நீர் சொல்வீராக அவர்கள்
கூறுவதுபோல் அவனுடன் வேறு தெய்வங்கள் இருந்தால்,
அப்போது அவை அர்ஷ{டையவன் (அல்லாஹ் தஆலாவின்)
அளவில் ஒரு வழியைத் தேடிக்கண்டு பிடித்துச் (சென்று)
இருக்கும் என்று
17:43. அவன் மிகவும் பரிசத்தமானவுன்; இன்னும்
அவர்கள் கூறும் கூற்றுக்களை விட்டு
அப்பாற்பட்டவனாக இருக்கின்றான்.
17:44. ஏழு வானங்களும், பூமியும், அவற்றில்
உள்ளவர்களும் அவனைத் துதி செய்து
கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு
துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும்
அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து
கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன்
பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும்
இருக்கின்றான்.
17:45. (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால்
உமக்கிடையிலும் மறுமையின் மீது ஈமான்
கொள்ளாதவர்களுக்கிடையிலும் மறைக்கப்பட்டுள்ள ஒரு
திரையை அமைத்து விடுகிறோம்.
17:46. இன்னும், அவர்கள் அதனை விளங்கிக் கொள்வதை
விட்டும் அவர்களுடைய இருதயங்களின் மேல்
மூடிகளையும், அவர்களுடைய காதுகளின் மீது
செவிட்டுத்தனத்தையும் நாம் அமைத்து விடுகிறோம்;
இன்னும் குர்ஆனில், உம்முடைய இறைவன் ஒருவனை
மட்டும் நீர் குறிப்பிடும் போது, அவர்கள்
வெறுப்படைந்து தம் பின்புறங்களில் (திரும்பி
விரண்டவர்களாகப்) பின்வாங்கி விடுகிறார்கள்.
17:47. (நபியே!) அவர்கள் உமக்குச் செவி
சாய்த்தால், என்ன நோக்கத்துடன் செவி
சாய்க்கின்றார்கள் என்பதையும் அவர்கள் தமக்குள்
இரகசியமாக ஆலோசனை செய்யும் போது, ''சூனியம்
செய்யப்பட்ட ஒரு மனிதரையே அன்றி (வேறெவரையும்)
நீங்கள் பின்பற்றிவில்லை"" என்று (தங்களுக்குள்)
அந்த அநியாயக்காரர்கள் சொல்வதையும் நாம்
நன்கறிவோம்.
17:48. (நபியே!) உமக்கு அவர்கள் எத்தகை உவமைகளைச்
சொல்கிறார்கள் என்பதை கவனித்துப்பாரும்! ஆகவே,
அவர்கள் வழிகெட்டு விட்டார்கள்; (நேரான) வழிக்கு
அவர்கள் சக்திப்பெற மாட்டார்கள்.
17:49. இன்னும்; ''(இறந்து பட்டு)
எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள்
ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக
நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?"" என்றும்
அவர்கள் கேட்கிறார்கள்.
17:50. (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் கல்லாகவோ,
இரும்பாகவோ ஆகுங்கள்.
17:51. ''அல்லது மிகப் பெரிதென உங்கள்
நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;""
(எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக
எழுப்பப்படுவீர்கள்). ''எங்களை எவன் (மறுமுறையும்
உயிர் கொடுத்து) மீட்டுவான்?"" என்று அவர்கள்
கேட்பார்கள். ''உங்களை எவன் முதலில் படைத்தானோ,
அவன் தான்!"" என்று (நபியே!) நீர் கூறும்;
அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம்
சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)?
என்று கேட்பார்கள். ''அது வெகு சீக்கிரத்திலும்
ஏற்படலாம்"" என்று கூறுவீராக!
17:52. உங்களை (இறுதியில்) அவன் அழைக்கும் நாளில்,
நீங்கள் அவன் புகழை ஓதியவர்களாக பதில்
கூறுவீர்கள்; (மரணத்திற்குப் பின்) சொற்ப(கால)மே
தங்கியிருந்ததாக நீங்கள் நினைப்பீர்கள்.
17:53. (நபியே!) என் அடியார்களுக்கு அவர்கள்
அழகியதையே சொல்ல வேண்டும் என்று கூறுவீராக!
நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீயதைத்
தூண்டி) விஷமஞ் செய்வான்; நிச்சயமாக ஷைத்தான்
மனிதனுக்குப் பகிரங்கமான பகைவனாக இருக்கின்றான்.
17:54. உங்களுடைய இறைவன் உங்களைப் பற்றி
நன்கறிவான்; அவன் நாடினால் உங்களுக்கு கிருபை
செய்வான்; அல்லது அவன் நாடினால் உங்களை வேதனை
செய்வான்; நாம் உம்மை அவர்களுக்கு வகீலாக (பொறுப்பாளியாக)
அனுப்பவில்லை.
17:55. உம்முடைய இறைவன் வானங்களிலிம் பூமியிலும்
உள்ளவர்களைப் பற்றி நன்கு அறிவான்; நபிமார்களில்
சிலரை வேறு சிலரைவிடத் திட்டமாக நாம்
மேன்மையாக்கியிருக்றோம்; இன்னும் தாவூதுக்கு
ஜபூர் (வேதத்தையும்) கொடுத்தோம்.
17:56. அவனையன்றி (வேறு தெய்வங்கள் இருப்பதாக)
நீங்கள் எண்ணிக்கொண்டிருப்பவர்களை
அழைத்துப்பாருங்கள்; அவர்கள் உங்களுடைய கஷ்டத்தை
நிவர்த்திக்கவோ அல்லது திருப்பிவிடவோ சக்தி
பெறவில்லை (என்பதை அறிவீர்கள்).
17:57. (அல்லாஹ்வையன்றி) இவர்கள் யாரை
பிரார்த்திக்கின்றார்களோ அவர்கள், ஏன் அவர்களில்
மிகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் கூட
தங்கள் இறைவன்பால் (கொண்டு செல்ல) நற்கருமங்களை
செய்து கொண்டும் அவனது அருளை எதிர்பார்த்தும்
அவனது தண்டனைக்கு அஞ்சியுமே இருக்கின்றனர்.
நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை அச்சப்படத்
தக்கதாகவே உள்ளது.
17:58. இன்னும் கியாம நாளைக்கு முன்னே (அழிச்சாட்டியம்
செய்யும்) எந்த ஊராரையும் நாம் அழிக்காமலோ,
அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ
இருப்பதில்லை இது(லவ்ஹ{ல் மஹ்ஃபூள் என்னும்)
ஏட்டில் வரையப்பெற்றே இருக்கிறது.
17:59. (நம்முடைய அத்தாட்சிகளை எவர்களுக்கு)
முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு
எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப
நம்மைத் தடுக்கவில்லை (இதற்கு முன்) நாம் 'ஸமூது"
கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான
அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு
மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை)
அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய)
அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.
17:60. (நபியே!) நிச்சயமாக உம்முடைய இவைன்
மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று
உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின்
போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும்
குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும்
மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை.
இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால்,
இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே
அதிகரிக்கச் செய்கின்றது.
17:61. இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம்
மலக்குகளிடம் ''ஆதமுக்கு நீங்கள் ஸ{ஜூது
செய்யுங்கள்"" என்று கூறிய போது, இப்லீஸை தவிர
அவர்கள் ஸ{ஜூது செய்தார்கள்; அவனோ ''களி மண்ணால்
நீ படைத்தவருக்கா நான் ஸ{ஜூது செய்ய வேண்டும்?""
என்று கூறினான்.
17:62. ''எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப்
பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம்
சொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத்
தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து
விடுவேன்"" என்று (இப்லீஸை) கூறினான்.
17:63. ''நீ போய் விடு அவர்களில் உன்னைப்
பின்பற்றுபவர் இருந்தால் - நிச்சயமாக நரகம் தான்
உங்கள் கூலியில் நிரப்பமான கூலியாக இருக்கும்.
17:64. ''இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி
சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை
உன் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்;
உன்னுடைய குதிரைப் படையையும் காலாட்படையையும்
கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய்,
அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ
கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான)
வாக்குறுதிகளையும் கொடு!"" (என்றும் அல்லாஹ்
கூறினான்) ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு
வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.
17:65. ''நிச்சயமாக (முஃமினான) என்னுடைய
அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை"" (என்றும்
அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என்
நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன்
போதுமானவன்.
17:66. (மானிடர்களே!) உங்கள் இறைவன்
எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை
நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும்
பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்;
நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க
கிருபையுடையவனாக இருக்கின்றான்.
17:67. இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம்
(துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள்
என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ,
அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்)
உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து
சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து
விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி
மறப்பவனாகவே இருக்கின்றான்.
17:68. (கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின்
ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான்
என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை
அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து
இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப்
பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.
17:69. அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில்
உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்)
முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள்
மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை
மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள்
அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி
நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என)
நம்மைத் தொடர்ந்து உங்களுக்கு(க் கேட்போர்)
எவரையும் காணமாட்டீர்கள்.
17:70. நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக்
கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும்,
கறையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல
உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம்
படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை
(தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.
17:71. (நபியே!) நாம் எல்லா மக்களையும்
அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர்
நினைவூட்டுவீராக அந்நாளில்) எவருடைய (செயல்
குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில்
கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகை நற்பேறுடைய)வர்கள்
தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும்,
அவர்கன் அணுவளவும் அநியாயம் செய்யப்பட
மாட்டார்கள்.
17:72. யார் இம்மையில் (நேர்வழியடையாக்)
குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக்
காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில்
மிகவும் தவறியவனாவான்.
17:73. (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம்
அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது
நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத்
திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு
நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும்
அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
17:74. மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்)
உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர்
கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல்
கூடும்.
17:75. (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர்
இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில்
இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம்
செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு
உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.
17:76. (நபியே!) உம்மை (உம்முடைய) பூமியிலிருந்து
அடி பெயரச்செய்து, அதை விட்டும் உம்மை
வெளியேற்றிவிட முனைகிறார்கள்; ஆனால் அவர்களோ
உமக்குப்பின்னர் சொற்ப நாட்களேயன்றி (அங்கு)
தங்கியிருக்க மாட்டார்கள்.
17:77. திடமாக, உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நம்
தூதர்களைப் பொறுத்தும் இது வழிமுறையாக இருந்து
வந்தது நம்முடைய (இவ்)வழிமுறையில் எந்த
மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
17:78. (நபியே!) சூரியன் (உச்சியில்)
சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு,
அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை
நிறுத்துவீராக இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலைநிறுத்துவீராக);
நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று
கூறுவதாகயிருக்கிறது.
17:79. இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில்
உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது
வருவீராக (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன்,
'மகாமம் மஹ்முதா" என்னும் (புகழ் பெற்ற) தலத்தில்
உம்மை எழுப்பப் போதும்.
17:80. ''என் இறைவனே! என்னை சிறந்த முறையில்
நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை
வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து
எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக!
என்று கூறுவீராக.
17:81. (நபியே!) இன்னும், ''சத்தியம் வந்தது
அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது
அழிந்து போவதேயாகும்" என்று கூறுவீராக.
17:82. இன்னும், நாம் முஃமின்களுக்கு
ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே
குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால்
அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும்
(இது) அதிகமாக்குவதில்லை.
17:83. நாம் மனிதனுக்கு அருட்கொடைகளை வழங்கினால்
அவன் (நன்றி செலுத்தாமல்) புறக்கணித்து(த் தோளை
உயர்த்திப்) பெருமை கொள்கிறான்; அவனை (ஏதேனுமொரு)
தீங்கு தொடுமானால் அவன் நிராசை கொண்டவனாகி
விடுகிறான்.
17:84. (நபியே!) நீர் கூறுவீராக ''ஒவ்வொருவனும்
தன் வழியிலேயே செயல் படுகிறான்; ஆனால் நேரான
வழியில் செல்பவர் யார் என்பதை உங்கள் இறைவன்
நன்கு அறிவான்.""
17:85. (நபியே!) ''உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்)
பற்றி அவர்கள் கேட்கிறார்கள். 'ரூஹ{" என்
இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது இன்னும்
ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச்
சொற்பமேயன்றி வேறில்லை"" எனக் கூறுவீராக.
17:86. (நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம்
வஹீயாக நாம் அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம்;
பின்னர், நமக்கெதிராக உமக்குப் பொறுப்பேற்கக்
கூடிய எவரையும் நீர் காணமாட்டீர்.
17:87. ஆனால் உம் இறைவனுடைய ரஹ்மத்தைத் தவிர (இவ்வாறு
நிகழாமல் இருப்பதற்கு வேறெதுவுமில்லை) நிச்சயமாக
உம் மீது அவனுடைய அருட்கொடை மிகப் பெரிதாகவே
இருக்கிறது.
17:88. ''இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக்
கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று
சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர்
சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது
போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது"" என்று
(நபியே) நீர் கூறும்.
17:89. நிச்சயமாக, இந்த குர்ஆனில்
மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும்
தெளிவாக) விவரித்துள்ளோம்; எனினும், மனிதர்களில்
மிகுதியானவர்கள் (இதை) நிராகரிக்காதிருக்கவில்லை.
17:90. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்; ''நீர்
எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப்
பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது
நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.
17:91. ''அல்லது போPச்சை மரங்களும், திராட்சைக்
கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு
இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர்
ஒலித்தோடச் செய்ய வேண்டும்.
17:92. ''அல்லது நீர் எண்ணுவது போல் வானம் துண்டு
துண்டாக இடிந்து எங்கள் மேல் விழச் செய்யும் வரை
அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் (நமக்குமுன்)
நேருக்கு நேராகக் கொண்டு வந்தாலன்றி.
17:93. ''அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு
இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்)
அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும்,
(அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக்
கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும்
வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள்
நம்ப மாட்டோம்"" என்று கூறுகின்றனர். ''என்
இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய
ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?""
என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.
17:94. மனிதர்களிடம் நேர்வழி (காட்டி) வந்த போது,
''ஒரு மனிதரையா அல்லாஹ் (தன்) தூதராக அனுப்பினான்""
என்று கூறுவதைத் தவிர அவர்கள் ஈமான் கொள்வதை
வேறெதுவும் தடுக்கவில்லை.
17:95. (நபியே!) நீர் கூறும்; ''பூமியில்
மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே
நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக
நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்)
தூதராக இறக்கியிருப்போம்"" என்று.
17:96. ''எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும்
சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்;
நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு
அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும்
இருக்கின்றான்"" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
17:97. அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ,
அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன்
யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு
உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர்
காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும்,
ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில்
குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று
சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம்
நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம்
நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.
17:98. அவர்கள் தம் வசனங்களை நிராகரித்து, ''நாம்
(மரித்து) எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு
மண்ணாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்)
புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா?"" என்றும்
சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுடைய
கூலி இது தான்.
17:99. நிச்சயமாக வானங்களையும், பூமியையும்
படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப்
படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவிலலையா?
இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பட்ட தவணையையும்
ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை,
எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை)
நிராகரிக்காமல் இல்லை!
17:100. ''என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்)
அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக்
கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ
என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்)
தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன்
உலோபியாகவே இருக்கின்றான்"" என்று (நபியே!) நீர்
கூறும்.
17:101. நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான
ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர்
அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன
நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!)
நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி 'மூஸாவே!
நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே
எண்ணுகிறேன்" என்று கூறினான்.
17:102. (அதற்கு) மூஸா ''வானங்களையும் பூமியையும்
படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத்
தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை
நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ
அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி)
நான் எண்ணுகின்றேன்"" என்று கூறினார்.
17:103. ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும்
பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்;
ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள்
அனைவரையும் மூழ்கடித்தோம்.
17:014. இதன் பின்னர் நாம் பனூ
இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த
நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி
வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவ்னின்
கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று
சேர்ப்போம்.""
17:105. இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே
நாம் இதனை (குர்ஆனை) இறக்கிவைத்தோம்; முற்றிலும்
சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது மேலும், (நபியே!)
நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி
எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.
17:016. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது
சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை
நாம் பகுதி, பகுதியாகப் பிரித்தோம்; இன்னும் நாம்
அதனைப் படிப்படியாக இறக்கிவைத்தோம்.
17:107. (நபியே!) ''அதனை நீங்கள் நம்புங்கள்,
அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல்,
குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர்
எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ,
அவர்களிடம் அது (குர்ஆன்)
ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸ{ஜூது
செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து)
விழுவார்கள்"" என்று (நபியே!) நீர் கூறும்.
17:018. அன்றியும், ''எங்கள் இறைவன் மிகப்
பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி
நிறைவேறி விட்டது"" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
17:109. இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள்
குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய
உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.
17:110. ''நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று
அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள்;
எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும்,
அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன""
என்று (நபியே!) கூறுவீராக இன்னும், உம்முடைய
தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக
மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும்
இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக.
17:111. ''அன்றியும், (தனக்குச்) சந்ததியை
எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில்
தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித
பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை)
இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ்
அமைத்தும்"" என்று (நபியே!) நீர் கூறுவீராக
இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த
வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.
|