|
அத்தியாயம்-33
ஸ_ரத்துல் அஹ்ஜாப் (சதிகார அணியினர்)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
33:1. நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக!
காஃபிர்களுக்கும், முனாஃபிக்களுக்கும்
கீழ்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்)
நன்கறிபவன், ஞானமிக்கவன்.
33:2. இன்னும் (நபியே!) உம்முடைய
இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர்
பின்பற்றுவீராக நிச்சயமாக அல்லாஹ் நீங்கள்
செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
33:3. (நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும்
நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக
இருக்கப் போதுமானவன்.
33:4 எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு
இருதயங்களை உண்டாக்கவில்லை - உங்கள் மனைவியரில்
எவரையும் நீங்கள் ளிஹார் (என் தாயின் முதுகைப்
போன்று அதாவது தாய் போன்று இருக்கிறாள் என்று)
கூறுவதனால் அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள்
தாயாக்கி விடமாட்டான், (அவ்வாறே) உங்களுடைய
சுவீகாரப்பிள்ளைகளை உங்களுடைய புதல்வர்களாக
ஆக்கிவிட மாட்டான். இவை யாவும் உங்களுடைய
வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும்,
அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன்
நேர்வழியையே காட்டுகிறான்.
33:5. (எனவே) நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை
அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி
(இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே
அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய
தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள்
அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு
சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய
நண்பர்களாகவும் இருக்கின்றனர்; (முன்னர்) இது
பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது
குற்றமில்லை ஆனால், உங்களுடைய இருதயங்கள்
வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது
குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க
கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
33:6. இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய
உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும்,
அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக
இருக்கின்றனர். (ஒரு முஃமினின் சொத்தை
அடைவதற்கு) மற்ற முஃமின்களை விடவும், (தீனுக்காக
நாடு துறந்த) முஹாஜிர்களை விடவும் சொந்த
பந்துக்களே சிலரைவிட சிலர் நெருங்கிய
(பாத்தியதையுடைய)வர்களாவார்கள்; இது தான்
அல்லாஹ்வின் வேதத்திலுள்ளது என்றாலும், நீங்கள்
உங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்ய நாடினால்
(முறைப்படி செய்யலாம்) இது வேதத்தில்
எழுதப்பட்டுள்ளதாகும்.
33:7. (நபியே! நம் கட்டளைகளை எடுத்துக்
கூறுமாறு) நபிமார்(கள் அனைவர்)களிடமும்,
(சிறப்பாக) உம்மிடமும்; நூஹ{, இப்ராஹீம், மூஸா,
மர்யமுடைய குமாரர் ஈஸா ஆகியோரிடமும் வாக்குறுதி
வாங்கிய போது, மிக்க உறுதியான வாக்குறுதியையே
அவர்களிடம் நாம் வாங்கினோம்.
33:8. எனவே உண்மையாளர்களாகிய (அத்தூதர்களிடம்)
அவர்கள் (எடுத்துக் கூறிய தூதின்) உண்மையை பற்றி
அல்லாஹ் கேட்பான்; (அவர்களை நிராகரித்த)
காஃபிர்களுக்கு அல்லாஹ் நோவினை தரும் வேதனையைச்
சித்தம் செய்திருக்கின்றான்.
33:9. முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ்
புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப்
பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த
போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்)
பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள்
மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை
அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
33:10. உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக்
கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து)
வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க்
குழி முடிச்ச)களை அடைந்து (நீங்கள் திணறி)
அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக்
கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த
அருள்கொடையை) நினைவு கூருங்கள்.
33:11. அவ்விடத்தில் முஃமின்கள் (பெருஞ்)
சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, இன்னும் கடுமையான
அதிர்ச்சியினால் அதிர்ச்சிக்கப்பட்டார்கள்.
33:12. மேலும் (அச்சமயம் நயவஞ்சகர்கள்)
முனாஃபிக்குகளும், எவர்களின் இருதயங்களில்
நோயிருந்ததோ அவர்களும், ''அல்லாஹ்வும், அவனுடைய
தூதரும் நமக்கு ஏமாற்றத்தைத் தவிர (வேறு)
எதையும் வாக்களிக்கவில்லை"" என்று கூறிய
சமயத்தையும் நினைவு கூருங்கள்.
33:13. மேலும், அவர்களில் ஒரு கூட்டத்தார்
(மதீனாவாசிகளை நோக்கி) ''யஸ்ரிப் வாசிகளே!
(பகைவர்களை எதிர்த்து) உங்களால் உறுதியாக நிற்க
முடியாது, ஆதலால் நீங்கள் திரும்பிச் சென்று
விடுங்கள்'" என்று கூறியபோது, அவர்களில்
(மற்றும்) ஒரு பிரிவினர்; ''நிச்சயமாக எங்களுடைய
வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன""
என்று - அவை பாதுகாப்பற்றதாக இல்லாத நிலையிலும்
- கூறி, (போர்க்களத்திலிருந்து சென்றுவிட)
நபியிடம் அனுமதி கோரினார்கள் - இவர்கள்
(போர்க்களத்திலிருந்து தப்பி) ஓடவதைத் தவிர
(வேறெதையும்) நாடவில்லை.
33:14 அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது
படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம் செய்யும்படி
அவர்களிடம் கேட்கப் பட்டிருக்குமானால்,
நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்து
இருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிது நேரமே
தவிர தாமதப் படுத்த மாட்டார்கள்.
33:15. எனினும், அவர்கள் (போரிலிருந்து)
புறங்காட்டி ஓடுவதில்லை என்று அல்லாஹ்விடத்தில்
இதற்கு முன்னர் நிச்சயமாக வாக்குறுதி
செய்திருந்தார்கள்; ஆகவே, அல்லாஹ்விடம் செய்த
வாக்குறுதி பற்றி (அவர்களிடம்) கேட்கப்படும்.
33:16. ''மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை
விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின்,
அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு
பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி
(அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்"" என்று
(நபியே!) நீர் கூறுவீராக.
33:17. ''அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை
நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர்
யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால்
(அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?)
அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்)
பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள்
காணமாட்டார்கள்"" என்று (நபியே!) நீர்
கூறுவீராக.
33:18. உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை
செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, ''நம்மிடம்
வந்து விடுங்கள்"" என்று கூறுபவர்களையும்
அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான்.
அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய
வருகிறார்கள்.
33:19. (அவர்கள்) உங்கள் மீது உலோபத்தனத்தைக்
கைக்கொள்கின்றனர். ஆனால் (பகைவர்கள் பற்றி) பயம்
ஏற்படும் சமயத்தில், மரணத்தறுவாயில்
மயங்கிக்கிடப்பவர்போல், அவர்களுடைய கண்கள்
சுழன்று சுழன்று, அவர்கள் உம்மைப் பார்த்துக்
கொண்டிருப்பதை நீர் காண்பீர்; ஆனால் அந்தப் பயம்
நீங்கி விட்டாலோ, (போர்க் களத்தில் எதிரிகள்
விட்டுச் சென்ற) செல்வப் பொருள்மீது பேராசை
கொண்டவர்களாய், கூரிய நாவு கொண்டு (கடுஞ்
சொற்களால்) உங்களைக் கடிந்து பேசுவார்கள்;
இத்தகையோர் (உண்மையாக) ஈமான் கொள்ளவில்லை ஆகவே,
அவர்களுடைய (நற்) செயல்களையும் அல்லாஹ் பாழாக்கி
விட்டான். இது அல்லாஹ்வுக்கு மிகவும்
எளிதேயாகும்.
33:20 அந்த (எதிர்ப்புப்) படைகள் இன்னும்
போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ்
எதிர்ப்பு)ப் படைகள் (மீண்டும்) வருமானால்
அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச் சென்று
காட்டரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள
செய்திகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள் -
ஆயினும் அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன்
இருந்திருந்தாலும் ஒரு சிறிதேயன்றி (அதிகம்)
போரிட மாட்டார்கள்.
33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும்
ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம்
தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின்
தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு
இருக்கிறது.
33:22. அன்றியும், முஃமின்கள் எதிரிகளின்
கூட்டுப் படைகளைக் கண்டபோது, ''இது தான்,
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு
வாக்களித்தது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும்
உண்மையே உரைத்தார்கள்"" என்று கூறினார்கள்.
இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு)
முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல்
இல்லை.
33:23. முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள்
அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில்
உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர்
(ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும்
அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை)
எதிர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் - (எந்த
நிலைமையிலும்) அவர்கள் தங்கள்
வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை.
33:24. உண்மையாளர்களுக்கு அவர்களின்
உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்;
அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும்
செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் -
நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க
கிருபையுடையவன்.
33:25. நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில்
(மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத்
திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்)
அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும்
போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன்,
மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்)
மிகைத்தவன்.
33:26. இன்னும், வேதக்காரர்களிலிருந்தும்
(பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை
(அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே
இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப்
போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை
நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு
பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.
33:27. இன்னும், அவன் உங்களை அவர்களுடைய
நிலங்களுக்கும், அவர்களுடைய வீடுகளுக்கும்,
அவர்களுடைய பொருள்களுக்கும், (இது வரையில்)
நீங்கள் மிதித்திராத நிலப்பரப்புக்கும்
வாரிசுகளாக ஆக்கி விட்டான்; மேலும் அல்லாஹ்
எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.
33:28. நபியே! உம்முடைய மனைவிகளிடம்; ''நீங்கள்
இவ்வுலக வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும்
நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு
வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில்
உங்களை விடுதலை செய்கிறேன்.
33:29. ''ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும், அவன்
தூதரையும், மறுமையின் வீட்டையும்
விரும்புவீர்களானால், அப்பொழுது உங்களில்
நன்மையாளர்களுக்காக அல்லாஹ் மகத்தான நற்கூலி
நிச்சயமாக சித்தம் செய்திருக்கிறான்"" என்றும்
கூறுவீராக!
33:30 நபியுடைய மனைவிகளே! உங்களில் எவரேனும்
பகிரங்கமான மானக்கேடு செய்வாராயின், அவருக்கு
வேதனை இரட்டிக்கப்படும்; இது அல்லாஹ்வுக்கு
மிகவும் சுலபமேயாகும்!
33:31. அன்றியும் உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும்
அவனுடைய தூதருக்கும் வழிபட்டு, நல்ல அமல்
செய்கிறாரோ, அவருக்கு நாம் நற்கூலியை இருமுறை
வழங்குவோம்; இன்னும் அவருக்கு கண்ணியமான
உணவையும் சித்தம் செய்திருக்கிறோம்.
33:32. நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில்
மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு
இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்)
பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன்
உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ,
அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள்
நல்ல பேச்சே பேசுங்கள்.
33:33. (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள்
வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான
காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப்
போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி
உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும்
கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய
தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்)
வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை
நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே
அல்லாஹ் நாடுகிறான்.
33:34 மேலும் உங்களுடைய வீடுகளில்
ஓதப்படுகின்றனவே அல்லாஹ்வின் வசனங்கள்
(அவற்றையும்) ஞான விஷயங்களையும் (ஹிக்மத்)
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - நிச்சயமாக
அல்லாஹ் (உங்கள் உள்ளங்களிலுள்ளவை பற்றி)
சூட்சமமாகத் தெரிந்தவன்; (உங்கள் செயல்கள்
பற்றி) நன்கறிந்தவன்.
33:35. நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும்,
பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும்,
பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்;
உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்;
பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்;
(அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும்
ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும்,
பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும்,
பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்)
காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்;
அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும்
ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ்
மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும்
சித்தப்படுத்தியிருக்கின்றான்.
33:36. மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு
காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால்,
அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம்
கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ
பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும்
அவனுடைய ரஸ_லுக்கும் எவரேனும் மாறு செய்தால்
நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே
இருக்கிறார்கள்.
33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள்
புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ,
அவரிடத்தில் நீர்; ''அல்லாஹ்வுக்குப் பயந்து
நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து
விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்""
என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை,
மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில்
மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன்
தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே
ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர்
நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால்
முஃமின்களால் (சுவீகரித்து)
வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை
விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை
வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில்
யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது)
நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின்
கட்டளையாகும்.
33:38. நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர்
நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு
முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த
அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும்
அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட
விதியாகும்.
33:39. (இறை தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின்
கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள்
அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறு
யாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்; ஆகவே,
கேள்வி கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே
போதுமானவன்.
33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர்
ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ
அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம்
இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும்
அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும்
நன்கறிந்தவன்.
33:41 ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான
திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள்.
33:42 இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத்
துதி செய்யுங்கள்.
33:43. உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின்
பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது
அருள்புரிகிறவன் அவனே இன்னும் அவனுடைய
மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்)
மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க
இரக்கமுடையவனாக இருக்கின்றான்.
33:44 அவனை அவர்கள் சந்திக்கும் நாளில்
''ஸலாமுன்"" (உங்களுக்குச் சாந்தியும்
சமாதானமும் உண்டாவதாக)"" என்பதுவே
(அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும்
அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன்
சித்தப்படுத்தியிருக்கின்றான்.
33:45 நபியே! நாம் நிச்சயமாக உம்மைச்
சாட்சியாகவும்; நன்மாராயங் கூறுபவராகவும்,
அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
33:46 இன்னும் அல்லாஹ்வின் பால் (மனிதர்களை) -
அவன் அனுமதிப்படி - அழைப்பவராகவும்;
பிரகாசிக்கும் விளக்காகவும் (உம்மை
அனுப்பியுள்ளோம்.)
33:47 எனவே! முஃமின்களுக்கு -
அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக
பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக!
33:48 அன்றியும் காஃபிர்களுக்கும்,
முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர்;
அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து)
விடுவீராக அல்லாஹ்வின் மீதே முற்றிலும்
உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக!
அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்.
33:49 ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை
நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை
தொடுவதற்கு முன்னமேயே 'தலாக்" செய்து
விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள்
கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும்
உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத்
(தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில்
அவர்களை விடுவித்து விடுங்கள்.
33:50 நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை
கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும்,
உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ்
அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக்
கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி
இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின்
சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின்
சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின்
மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின்
மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத்
செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு
விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும்
முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை
அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள
விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை
அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி
உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற
முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு
அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய
வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்
பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்;
உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும்
பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ்
மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன்.
33:51. அவர்களில் நீர் விரும்பிய வரை ஒதுக்கி
வைக்கலாம். நீர் விரும்பியவரை உம்முடன்
தங்கவைக்கலாம், நீர் ஒதுக்கி வைத்தவர்களில் நீர்
நாடியவரை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம்.
(இதில்) உம்மீது குற்றமில்லை அவர்களுடைய கண்கள்
குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர்கள்
விசனப்படாமல் இருப்பதற்கும் அவர்கள்
ஒவ்வொருவரும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக்
கொண்டு திருப்தி அடைவதற்காகவும், இது சுலபமான
வழியாகும். மேலும், அல்லாஹ் உங்கள் உள்ளங்களில்
இருப்பதை நன்கறிகிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாம்
அறிந்தவன்; மிக்க பொறுமையாளன்.
33:52. இவர்களுக்குப் பின்னால் உம் வலக்கரம்
சொந்தமாக்கிக் கொண்டவர்கள் தவிர இதர பெண்கள்
உமக்கு ஹலால் ஆகமாட்டார்கள்; இன்னும் இவர்களுடைய
இடத்தில் வேறு மனைவியரை மாற்றிக் கொள்வதும்;
அவர்களுடைய அழகு உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே
- ஹலால் இல்லை - மேலும், அல்லாஹ் அனைத்துப்
பொருள்களையும் கண்காணிப்பவன்.
33:53. முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு
அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை
எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய
வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள்
அழைக்கப் பட்டீர்களானால் (அங்கே)
பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி
விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்;
பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே)
அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை
நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர்
வெட்கப்படுவார் ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ்
வெட்கப்படுவதில்லை நபியுடைய மனiவிகளிடம் ஏதாவது
ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு
அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே
உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களைளும்
தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை
நோவினை செய்வது செய்வது உங்களுக்கு தகுமானதல்ல
அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர்
நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது நிச்சயமாக இது
அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ)
காரியமாகும்.
33:54 நீங்கள் ஒரு விஷயத்தை
வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள்
மறைத்து வைத்தாலும், நிச்சமயாக அல்லாஹ் எல்லா
விஷயங்களையும் அறிபவனாக இருக்கின்றான்.
33:55. (நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள்,
தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள்
முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள்
சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள்
சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின்
பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள்
சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது)
அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள்
அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின்
மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ்
எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.
33:56. இந்த நபியின் மீது அல்லாஹ் அருள்
புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத்
தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது
ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
33:57. எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும்
நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக
அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கின்றான்;
மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேதனையைச்
சித்தப்படுத்தி இருக்கின்றான்.
33:58. ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட
பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி
எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக
அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து
கொள்கிறார்கள்.
33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம்
பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின்
பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத்
தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள்
(கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை
செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்.
மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க
அன்புடையவன்.
33:60. முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில்
நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம்
செய்து கொண்டிருப்பவர்களும் (தம்
தீச்செயல்களிலிருந்து) விலகிக்
கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக
(நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாக
சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு
சொற்ப(கால)மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக
(வசித்திருக்க) மாட்டார்கள்.
33:61. அ(த்தகைய தீய)வர்கள் சபிக்கப்
பட்டவர்களாவார்கள்; அவர்கள் எங்கே
காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும்
கொன்றொழிக்கப்படுவார்கள்.
33:62. அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன்
சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின்
(அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர்
காணமாட்டீர்.
33:63. (நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை
பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; ''அதைப்
பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது"" என்று
நீர் கூறுவீராக அதை நீர் அறிவீரா? அது
சமீபத்திலும் வந்து விடலாம்.
33:64. நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து,
அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக)
நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.
33:65. அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்;
தங்களைக் காப்பாவரையோ, உதவி செய்பவரையோ அவர்கள்
காணமாட்டார்கள்.
33:66. நெருப்பில் அவர்களுடைய முகங்கள்
புரட்டப்படும் அந்நாளில், ''ஆ, கை சேதமே!
அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே
இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க
வேண்டுமே!"" என்று கூறுவார்கள்.
33:67. ''எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள்
எங்கள் தலைவர்களுக்கும், எங்கள்
பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை
வழி கெடுத்துவிட்டார்கள்"" என்றும் அவர்கள்
கூறுவார்கள்.
33:68. ''எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு
வேதனையைத் தருவாயாக அவர்களைப் பெருஞ் சாபத்தைக்
கொண்டு சபிப்பாயாக"" (என்பர்).
33:69. ஈமான் கொண்டவர்களே! மூஸாவை(ப் பற்றி
அவதூறு கூறி) நோவினை செய்தவர்களைப் போன்று
நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஆனால் அவர்கள் கூறியதை
விட்டு அல்லாஹ் அவரைப் பரிசுத்தமானவராக்கி
விட்டான்; மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் கண்ணிய
மிக்கவராகவே இருந்தார்.
33:70 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே
சொல்லுங்கள்.
33:71. (அவ்வாறு செய்வீர்களாயின்) அவன்
உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி
வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு
மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன்
தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான
வெற்றி கொண்டு விட்டார்.
33:72. நிச்சயமாக வானங்களையும், பூமியையும்,
மலைகளையும் (நம் கட்டளைகளான) அமானிதத்தை சுமந்து
கொள்ளுமாறு எடுத்துக்காட்டினோம், ஆனால் அதை
சுமந்துக்கொள்ள அவை மறுத்தன, அதைப்பற்றி அவை
அஞ்சின. (ஆனால்) மனிதன் அதை சுமந்தான்.
நிச்சயமாக மனிதன் (தனக்குத்தானே) அநியாயம்
செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கின்றான்.
33:73. எனவே (இவ்வமானிதத்திற்கு மாறு செய்யும்)
முனாஃபிக்கான ஆண்;களையும்;, முனாஃபிக்கான
பெண்களையும்;, முஷ்ரிக்கான ஆண்களையும்,
முஷ்ரிக்கான பெண்களையும் நிச்சயமாக அல்லாஹ்
வேதனை செய்வான்; (ஆனால் இவ்வமானிதத்தை மதித்து
நடக்கும்) முஃமினான ஆண்களையும், முஃமினான
பெண்களையும் (அவர்கள் தவ்பாவை ஏற்று)
மன்னிக்கின்றான். அல்லாஹ் மிக மன்னிப்பவன்;
மிக்க அன்புடையவன்.
|